Monday, January 17, 2011

பொங்கலோ பொங்கல் செய்யும் முறை

பொங்கலோ பொங்கல்!

Pongal

பொங்கல் என்றால் சர்க்கரைப் பொங்கலும், தித்திக்கும் கரும்பும், தேங்காய்த் துருவலும்தான் நினைவுக்கு வரும். பொங்கல் பண்டிகையின்போது செய்யப்படும் சில வகை உணவுகளின் பட்டியல், அதைச் செய்யும் முறை இதோ...

சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:

பால் : 2 லிட்டர்
பாதாம் பருப்பு : 10
அரிசி : ஒன்றரை கப்
பாசிப்பருப்பு : கால் கப்
முந்திரிப் பருப்பு : 15
தூள் செய்யப்பட்ட வெல்லம் : ஒன்றரை கப்
காய்ந்த திராட்சை : 30
குங்குமப்பூ : கால் டீஸ்பூன்
தூள் செய்யப்பட்ட ஏலம் : 1 டீஸ்பூன்
நெய் : 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும் தூள் செய்து கொள்ளவும்.உலர்ந்த திராட்சையை சுத்தம் செய்து கொள்ளவும்.அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

பாலை சூடு செய்யவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியையும், பருப்பையும் அதில் போடவும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்தவுடன் அதில்வெல்லத்தையும், நெய்யையும் சேர்க்கவும். இது மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைக்கப்பட வேண்டும்.

இதனுடன் பொடி செய்து வைக்கப்பட்ட பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும், குங்குமப் பூ மற்றும் ஏலக்காய் பொடியையும், உலர்ந்த திராட்சையையும்போடவும். சிறிது நேரம் சூடு செய்யவும். பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

இதை பொங்கல் பானைக்கான மண்பானையில் செய்தால் சுவையும் கூடுதலாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

--

வெண்பொங்கல்:

தேவையான பொருட்கள்:

அரிசி : 2 கப்
பாசிப்பருப்பு : ஒன்றரை கப்
நெய் : 2 டீ ஸ்பூன்
வறுக்கப்பட்ட முந்திரிப்பருப்பு : 10
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி தயாராக வைத்துக் கொள்ளவும். இதை நல்ல குழிவான பாத்திரத்தில் கால் லிட்டர் நீரில் கொதிக்கவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய்யையும், முந்திரிப் பருப்பையும் சேர்த்து வைக்கவும்.

இதை அரிசி, பருப்பு, உப்பை சேர்த்து கலக்கி கொதிக்க வைக்கவும். இந்த கலவையை அவ்வப்போது கிளறி வரவும். நன்கு வெந்தவுடன் இறக்கி நெய்போட்டு சூடாக பரிமாறவும்.

--

வெண்பொங்கல் (தமிழக ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:

அரிசி : 2 கப்
பாசிப் பருப்பு : 1 கப்
மிளகு பொடி : ஒன்றரை டீ ஸ்பூன்
சீரகம் : 1 டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு : 10
சுக்கு : : 10 கிராம் (அல்லது 50 பைசாவுக்கு)
நெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை பொன்நிறம் வரும் வரை வறுக்கவும் வறுத்து வைத்த பருப்புடன் அரிசியை போட்டு அதைப் போல் இரண்டரை பங்கு நீர் ஊற்றி அதை ரைஸ்குக்கரில் போட்டு வேக வைக்கவும்.

முந்திரி பருப்பை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சுக்கையும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பையும், இஞ்சியையும் நெய்யில்போட்டு வறுத்துக் கொள்ளவும். சீரகத்தையும், மிளகையும் இஞ்சி, முந்திரியுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். இந்த கலவயை நன்கு வெந்துள்ள அரிசி பருப்புடன்சேர்த்து (பொங்கல்) கிளறவும்.

இத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். (சூடு குறைந்திருந்தால் லேசாக சூடு செய்து கொள்ளலாம். ரொம்பவும் வேக வைத்து விடவேண்டாம்)

சூடாக எடுத்து பொங்கலை நெய் ஊற்றி பரிமாறவும். பொங்கலுக்கு ஏற்ற சைட் டிஷ். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி. சுவையாக சாப்பிட்டுசுகமாக வாழுங்கள்.

--

ரவா பொங்கல்:

தேவையான பொருட்கள்:

ரவா : 1 கப்
பாசிப்பருப்பு : அரை கப்
மிளகு : 5
சீரகப்பொடி : 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1
பெருங்காயப் பொடி : சிறிதளவு
மஞ்சள் பொடி : சிறிதளவு
இஞ்சி : சிறிதளவு
உப்பு : அரை டீ ஸ்பூன்
எண்ணெய் : 6 டீ ஸ்பூன்
நெய் : 2 டீ ஸ்பூன்

செய்முறை:

அரை கப் பாசிப் பருப்புடன் 1 கப் நீர் சேர்க்கவும். இதை குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும். ரவையை 4 டீ ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவும். இரண்டுகப் நீரை ஊற்றி அதில் ரவையை போட்டு நன்கு வேகும் வரை கலக்கவும். வேக வைக்கப்பட்டிருந்த பருப்பை வெந்து கொண்டிருக்கும் ரவையுடன்போட்டு. அதனுடன் உப்பையும் போட்டு நன்கு கலக்கவும். (பொங்கல் ரெடி)

2 டீ ஸ்பூன் எண்ணெயில் மிளகை போட்டு வறுக்கவும். அதனுடன் பெருங்காய பொடியையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும். இதனுடன் சீரகப் பொடியையும்சேர்த்துக் கொள்வும்.

முந்திரிப்பருப்பை பொன்நிறம் வரும் வரை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் வெட்டி வைக்கப்பட்ட மிளகாயையும், இஞ்சியையும் சேர்க்கவும். இந்தமுழுக்கலவையையும் பொங்கலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.பொங்கலில் 2 டீ ஸ்பூன் நெய்யை ஊற்றி கலக்கவும்.

சூடான ரவா பொங்கல் ரெடி. ரசித்து சாப்பிடுங்கள்.

சூடான பொங்கலையும், தித்திக்கும் கரும்பையும், கூடவே தேங்காய்த் துறுவலையும் சேர்த்து பொங்கல் பண்டிகையை சுவையாக கொண்டாடுங்கள்.